கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் வாரியத் தலைவர் அணிக்கு எதிராக இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் குவித்துள்ளது.
வாரியத் தலைவர் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டன். இவர் டாஸில் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஓவருக்கு 4.67 என்ற ரன் விகிதத்தில் இலங்கை அணி விரைவு ரன் குவிப்பில் ஈடுபட்டு 411 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் சதீரா சமரவிக்ரமா, திமுத் கருண ரத்னே முதல் விக்கெட்டுக்காக 134 ரன்களைச் சேர்த்தனர். திமுத் கருணரத்னே 50 ரன்களில் ரிட்டையர்ட் அவுட் ஆனார்.
தினேஷ் சந்திமால் (29), ஆஞ்சேலோ மேத்யூஸ் (54) ஆகியோரும் ரிட்டையர்ட் அவுட் ஆகினர். தொடக்க வீரர் சமரவிக்ரமா 77 பந்துகளில் 74 ரன்கள் என்று அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 13 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார்.
திலுருவன் பெரேரா 48 ரன்களையும், ரோஷன் சில்வா 36 ரன்களையும் எடுத்து பங்களிப்பு செய்தனர்.
வாரியத் தலைவர் அணியில் ஆடிய வீரர்கள் நடப்பு ரஞ்சி டிராபியில் ஆடாத வீரர்கள் என்பதால் பவுலிங் பலவீனமாக அமைந்தது. ஆப் ஸ்பின்னர் ஜலஜ் சச்சேனா மட்டுமே அனுபவசாலி, ஆனால் அவரும் 22 ஓவர்களில் 100 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றினார். சந்தீப் வாரியர் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஏ.ஏ.பந்தாரி 111 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.