பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபையில் 3 தீர்மானங்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நிபந்தனை:
இதன்படி, அந்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டி தாக்குதல் நடத்துபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். வடக்கு வஜீரிஸ்தானில் செயல்படும் ஹக்கானி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதுடன், அந்த பகுதி அவர்களுக்கு புகலிடமாக திகழ்வதை தடுக்க வேண்டும். ஆப்கன் எல்லையில் செயல்படும், ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த, அந்நாட்டுடன் இணைந்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, 2017அக்டோபர் 1 முதல் 2018 டிசம்பர் 31 வரையிலான கால கட்டத்தில் வழங்க உள்ள 400 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்க அரசு கூறியுள்ளது.