நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று (பெப் 16) நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குக் தகவல் வழங்கப்பட்டது.
ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் விஜய விக்கிரம சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியினை பொலிஸார் கோரியிருந்தனர். உறவினர்களும்,பொதுமக்களும் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த ஆண் நுவரெலியா காலாபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விஜயசுந்தரலாகே பாலித்த சந்தகெழும் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தற்கொலை செய்துள்ளாரா அல்லது கொலையா என்ற பல கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.