நாரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி நரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதியாகியிருந்தார்.
இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை கடந்த சனிக்கிழமை அவதானிப்புக்கு உட்படுத்திய சிறைச்சாலை மருத்துவர்கள், கொழும்பு தேசிய மருத்துவமனை அல்லது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என பரிந்துரைத்திருந்தனர்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்காக சிறைச்சாலை நோயாளர் காவு வண்டி ஒன்று நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துவமனைக்கு பிரவேசித்திருந்தது.
எனினும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்களின் அனுமதி கிடைக்காதமையினால், நான்கு மணிநேரத்திற்கு பின்னர் அங்கு காத்திருந்த நோயாளர் காவு வண்டியுடன், அதிகாரிகளும் வெளியேறினர்.
இந்த நிலையில், தமது தந்தை நாரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என அதன் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

