”தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக, தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. இதற்காக, தமிழக சட்டப்பேரைவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்திவருகிறார்.
இந்த நிலையில், ”நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களைத் தயார்படுத்தும் வண்ணம் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்தக் கையேடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை எழும்பூரில், அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறை சார்பில் நடத்தப்படும் பண்டைய வரலாறு, தொல்லியல் தொடர் சொற்பொழிவுகள் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட அவர், இவ்வாறு பேசினார்.
அதேபோல, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3 விதமான சீருடைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என மூன்றுவிதமான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.