ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வைக்குமாறு மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளார்.
ஜனாதிபதிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள தேரர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைமை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதையும், தேரர் சுட்டிகாட்டியுள்ளார்.
ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை முன்வைக்க வேண்டியது அவசியம் எனவும் மகாநாயக்க தேரர், ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு ஏற்ற வகையில் தீர்வை முன்வைத்து, நிலையான தீர்வை பெறுவதே சிறந்தது எனவும் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ள தேரர், அதனை கருத்திற்கொண்டு தீர்வை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.
அத்தகைய சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின் அதற்கு முழுமையான ஆலோசனைகளை வழங்கி, நாட்டின் ஸ்த்திரதன்மை உறுதிபடுத்த ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

