காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் அணி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. துவக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்கள் பெற்றுத் தந்தனர். இன்று நடந்த பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி, நடப்புச் சாம்பியனான சிங்கப்பூர் அணியை எதிர் கொண்டது. முந்தைய சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள் அதே நம்பிக்கையுடன் இறுதி போட்டியில் சாம்பியன் சிங்கப்பூர் அணியைச் சந்தித்தனர்.
முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. ஆனால் அடுத்த இரண்டு போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, 3-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தித் தங்கப்பதக்கத்தை வென்றனர். காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரிகோம் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் குத்துச்சண்டையில் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் கிடாம்பி இணை, இறுதி போட்டிக்கு முன்னேறியது. காமன்வெல்த் போட்டிகளில் முதன் முறையாக பேட்மிண்டன் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இதுவரை இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, 31 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.