தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. திரையுலக பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டதால் விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும். ஒரு மாதமாக எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாத ஹீரோக்களுக்கோ, ஹீரோயின்களுக்கோ பெரிய பிரச்சினையில்லை. அவர்கள் ஒரே சமயத்தில் ஒரே படத்தில் மட்டும்தான் அதிகம் நடிப்பார்கள். ஆனால், நகைச்சுவை நடிகர்களுக்கு அப்படியில்லை. அவர்கள் ஒரே சமயத்தில் பத்து படங்கள் வரையிலும் நடிப்பார்கள். அவர்களுக்குத்தான் அடுத்த சில மாதங்களுக்குப் பிரச்சினை.
ஒவ்வொரு படத்திலிருந்தும் நடிப்பதற்கு அவர்களுக்கு அழைப்புகள் வரும். யார் படத்திற்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது என்பதில்தான் அவர்களுக்குக் குழப்பமாக இருக்கும். அவற்றை சமாளித்து சரி செய்வதற்குள் அவர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும். குறிப்பாக யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், மனோபாலா, சூரி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள்தான் இந்தப் பிரச்சினையில் சிக்குவார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தால் சொல்ல வேண்டியதில்லை. சிரிப்பு நடிகர்கள் சிக்கலில் சிக்கிய நடிகர்களாகிவிடுவார்கள்.