தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுடனோ தனக்கு திருட்டுத்தனமான எந்தவொரு இணக்கப்பாடுகளும் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் இன்று (04) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் பொய் வாக்குறுதிகளை வழங்கி அரசியலில் ஈடுபடும் ஒருவர் அல்லன். அபிவிருத்திகளை மேற்கொள்வதாக எனது தந்தை கூறி அவர் அதனை உறுதியாக நிறைவேற்றினார். நாம் செய்வதாக கூறும் விடயங்களை உறுதியாக செய்வோம்.
30 வருட யுத்தம் காரணமாகவே நான் எனது தந்தையை இழந்தேன். நான் எனது தந்தையை இழந்ததைப் போன்று இலட்சக்கணக்கான மக்கள் தமது உறவுகளை இழந்தனர். தற்போது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

