தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.
கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பாடசாலையைச் சேர்ந்த குகராஜ் வைஷ்ணவி 2.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் இப் பாடசாலை வென்றெடுத்த முதலாவது பதக்கங்கள் இவை ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை பி. சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய வீராங்கனை சசிகுமார் நிரோஷா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
5000 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 19 நிமிடங்கள், 54.18 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்றார்.
இந்த பாடசாலை சார்பாக கனஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது மாணவி என்ற பெருமையை நிரோஷா பெற்று வரலாறு படைத்தார்.
பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரருக்கு தங்கம்
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் பாங்கோ விகிர்தன் (8:37.20) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதே போட்டியில் திகனை, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் பி. ஆர். விதூஷன் (8:43.70) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (32.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் வை. துலஸ்திகன் (13.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. கௌசிகள் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஐந்து புதிய சாதனைகள்
போட்டியின் முதலாம் நாளன்று 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொறணை, தக்சிலா மத்திய கல்லூரி வீராங்கனை ஷலோமி ஜயகொடி, சம்மட்டியை 40.81 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியாலய வீராங்கனை தெவ்மினி கருணாதிலக்க (12.68 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இரத்தினபுரி ஜனாதிபதி கல்லூரி வீராங்கனை மிஹின்சா தெவ்மினி அபேரத்ன (1.74 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை டிலினி ராஜபக்ஸ (5.96 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொரணை தக்சிலா மத்திய கல்லூரி வீரர் எஸ். எம். கருணாரட்ன (40.68 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.