தேசிய கீதத்தை தமிழில் பாடும் போது சிங்கள மொழி மூலம் உள்ள அரசியல் யாப்பு மீறப்படுவதாகவும், சிங்கள மொழி மூலம் பாடும் போது தமிழ் மொழி மூலமான அரசியல் யாப்பு மீறப்படுவதாகவும் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது தொடர்பில் தற்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றுக் கருத்துக்கள் தொடர்பில் சகோதர ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேசிய கீதம் சிங்களத்தில் ஸ்ரீ லங்கா மாதா என்றே கூறப்பட்டுள்ளது. இதனை ஆங்கில மொழி மூல அரசியல் யாப்பிலும் ஸ்ரீ லங்கா மாதா என்றே கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் மாத்திரம் ஸ்ரீ லங்கா தாயே என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நாட்டிலும் ஒரு தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்தக் கருத்தை வைத்து அல்ல நான் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தேன். மாறாக, தமிழில் தேசிய கீதம் இசைப்பது அரசியல் யாப்புக்கே முரணானது.
அரசியல் யாப்பின் 22 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், அரசியல் யாப்பில் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்படுமாயின், சிங்கள மொழியில் காணப்படும் கருத்துக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். இதனால், தமிழில் தேசிய கீதம் இசைக்கும் போது அரசியல் யாப்பு மீறப்படுகின்றதை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

