தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டில் 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்வர்களில் நெஞ்சில் குண்டு காயம் பட்டு இறந்தவர் பெயர் ஜெயராமன் என்றும் அவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மற்ற இருவர் பெயர், விவரம் தெரியவில்லை. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து சூறையாடி, 50க்கும் மேற்பட்ட வாகனங்களை தீக்கிரையாக்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. மொத்த தூத்துக்குடி நகரமும் பொதுமக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து இப்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

