வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஓரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரையேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை உடற்கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ரங்கநாதன் ரவீன் என்ற ஒரு மாதக் குழந்தைக்கு தாய்பால் புரையேறிய நிலையில்
உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் முயற்சி பலனின்றி குழந்தை மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குழந்தையின் உடற்கூற்று மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தாய் வவுனியா வைத்தியசாலையிலேயே குழந்தையை பிரசவித்த அதேவேளை, வைத்தியசாலை வைத்தியர்களின் மருத்துவ அறிக்கையிலும் குழந்தை ஆரோக்கியமனது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் தற்போது குழந்தை இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் இதயத்தில் துவாரம் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமை பெற்றோர், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்த பின் வைத்தியர்கள் சரியான முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமையே தமது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, மேலதிக உடற்கூற்று மருத்துவ பரிசோதனைக்காக குழந்தையின் உடல் பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

