பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தலையில் துண்டு போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரின் மனு நீதி நாளில் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ளது. வானம் மனது வைத்தால் மட்டுமே இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வாழ்வு செழிக்கும். ஆனால், கடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயமும் பொய்த்துப் போனது. கையில் இருந்த விதை நெல்லை விதைத்துவிட்டு காத்திருந்த விவசாயிகளுக்குச் சாவியாகிப்போன பயிர்களே மிஞ்சின. இதனால் விவசாயிகள் கையில் இருந்த காசை இழந்து பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நஷ்டத்திலிருந்து விவசாயிகளை மீட்க பாரத பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திலும் செயலாக்கப்பட்டது. இதை நம்பி மாவட்டத்தின் பலப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விதைத்த பயிர்களுக்குக் காப்பீடு செய்தனர். ஆனால் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளில் ஒரு சில கிராமத்துக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் கொழுந்துரை குருப்பினைச் சேர்ந்த காரைக்குடி, உட்கடை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடுக்கான தொகையினைச் செலுத்தியிருந்தும் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும் பயிர்க் இழப்பீட்டுத் தொகையினை வழங்க வலியுறுத்தியும் இக்கிராம விவசாயிகள் இன்று தங்கள் தலைகளில் துண்டைப் போட்டுகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.