முதல் சீஸனிலேயே இளம் வீரர்களின் அனல் பறக்கும் ஆட்டத்தால் மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவிட்டது ப்ரோ கபடி லீக். முதல் நான்கு சீஸன்களில் எட்டு அணிகள்கொண்ட தொடராக நடந்தது. ஒவ்வோர் அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடினாலும் தமிழ்நாட்டை மையமாகக்கொண்ட அணி இல்லாதது பெரும்குறையாகவே இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் பொருட்டு சென்ற சீஸனில் `தொட்டுப்பாரு… நாங்க தாறுமாறு’ என, தமிழ்த் தலைவாஸ் உள்பட புதிதாக நான்கு அணிகள் களமிறங்கின.
இந்த வருடத்துக்கான 6-வது ப்ரோ கபடி லீக் வீரர்களுக்கான ஏலம், மும்பையில் இரண்டு நாள்கள் நடந்தன. இதில் தமிழ்த் தலைவாஸ் அணி அனுபவமான முன்னணி வீரர்கள், இளம் புயல்கள் எனச் சிறந்த கலவையோடு புதிய அணியைத் தேர்வுசெய்துள்ளனர். தமிழ்த் தலைவாஸ் அணி கடந்த சீஸனில் ஆடிய மூன்று முக்கிய வீரர்களான ரைடிங் ஹீரோ அஜய் தாகூர், டிஃபண்டர்கள் அமித் ஹூடா அருண் ஆகியோரைத் தக்கவைத்துக்கொண்டது. மூன்று முக்கிய வீரர்களான மஞ்சித் சில்லர், ஜஸ்விர் சிங் மற்றும் சுகேஷ் ஹெக்டே உள்பட 19 பேரை உள்ளடக்கிய தமிழ்த் தலைவாஸ் அணியில் 9 ரைடர்ஸ், 4 ஆல்ரவுண்டர் மற்றும் 6 டிஃபண்டர்கள் மிரட்ட உள்ளனர்.