தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏயுமான உதயநிதி ஸ்டாலின் இன்று புதன்கிழமை (டிச.14) அமைச்சராக பதவியேற்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் செய்லபடுவேன். ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படமே கடைசி படம். இனி நடிக்க மாட்டேன்.அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கூறினார்.