டீல் அரசியல் ஊடாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் முயற்சித்தால் நாட்டு மக்கள் அரச தலைவர்களுக்கு எதிராக டீல் செய்வார்கள் என்பதை அரச தலைவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை கைப்பற்றியுள்ளதை போன்று அரச தலைவர்கள் அரசாங்கத்தை கைப்பற்றி தேர்தலை நடத்தாமல் பலவந்தமாக ஆட்சியில் இருக்க தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார்கள்.
தனக்கு மக்களாணை இல்லை என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.தேர்தலை நடத்த நிதி இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது.
2023 ஆம் ஆண்டு 3600 பில்லியன் ரூபா அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.அரசாங்கத்தின் ஒரு நாளுக்கான அரச வருமானம் 8 பில்லியன் ரூபாவாகும்.உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா தேவைப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா நிதியை திரட்டிக் கொள்ள முடியா விட்டால் இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும்.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களை வீட்டுக்கு அனுப்பவே தேர்தல் நடத்த வேண்டும்.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை பலவந்தமான முறையில் கைப்பற்றியதை போன்று இந்த அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் பலவந்தமான முறையில் ஆட்சியில் இருக்க சூழ்ச்சி செய்கிறது.
சிறந்த நோக்கத்திற்கான தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் கொண்டு வரப்படவில்லை.தேர்தலுக்கான அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்கும் செயற்பாடு உலகில் எங்கும் இடம்பெறாது.தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளாத குறுக்கு வழிகள் இல்லை ஏதும் இல்லை என்று குறிப்பிட முடியுமா,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது,அவர் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதி நாட்டை நிர்வகிக்க அல்ல குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினராக கூட பதவி வகிக்கும் அதிகாரத்தை மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கவில்லை.
இந்த பாராளுமன்றத்திற்கு மக்களாணை கிடையாது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவி விலக்கினார்கள்.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணிப்பார்கள் என்பதே உண்மை அதனால் தான் அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சமடைகிறது.
அரசியலமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது,ஆனால் மக்கள் போராட்டத்தின் ஊடாக அவர்களை விரட்டியடித்தார்கள்.
அரசியலமைப்பு ஊடாக தேர்தலை பிற்போட ஜனாதிபதி,பிரதமர் சூழ்ச்சி செய்தால் மக்கள் போராட்டம் தீவிரமடையும்.உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாவிட்டால் அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தையும்,வரபிரசாதத்தையும் பகுதியளவில் குறைக்கலாம்.தமது அரசியல் தீர்மானத்தை வெளிப்படுத்த மக்களுக்கு இடமளிக்காவிட்டால் அது பாரிய விளைவுகள் ஏற்படும்.
டீல் அரசியல் ஊடாக ஆட்சியில் இருக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் முயற்சித்தால் அவர்கள் வெகுவிரைவில் குப்பை கூட்டைக்குள் தள்ளப்படுவார்கள்.மக்களாணையை முடக்க அரசியல் டீல் செய்தால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் டீல் செய்வார்கள் என்பதை அரச தலைவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.