அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்று, ஓராண்டு நிறைவடையும் தினத்தில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில், ஏராளமான பெண்கள், கண்டன பேரணி நடத்தினர்.
அமெரிக்காவில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப், அதிபராக உள்ளார். இவர், 2017
ஜனவரியில், அதிபராக பதவி ஏற்றார்.
அப்போது, டிரம்ப் மீது இருந்த பாலியல் குற்றச்சாட்டுகளை கண்டித்தும், பெண்கள் பற்றி பல அவதுாறான கருத்துக்களை அவர் பேசியதற்கு
எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்கா முழுவதும், லட்சக்கணக்கான பெண்களும், ஆண்களும் பேரணி நடத்தினர். இதற்கு, ‘பெண்கள் பேரணி’ என, பெயர் வைத்தனர்.
தற்போது, டிரம்ப் பதவியேற்று, ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், அமெரிக்காவில், இரண்டாம் ஆண்டு பெண்கள் பேரணி, நேற்று முன்தினம் நடந்தது. வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, பாஸ்டன் உட்பட, நாடு முழுவதும் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர். அப்போது அவர்கள், இளம் சிவப்பு நிற தொப்பிகளை அணிந்து, அதிபர் டிரம்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.