ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி செய்கின்றோம் ஆனால் சில சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது அதிருப்தியளிக்கிறது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அபிவிருத்தி பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சரவை அந்தஸ்த்தற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பங்களில் திருப்தியளிப்பதாக அமைந்திருந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிருப்தியுடனேயே செயற்பட்டு வருகின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்கு அவர் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் எமக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால் அரசாங்கம் மீது அவர் சுமத்தும் குற்றசாட்டுக்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இருப்பினும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுக்கவே எதிர்பார்கின்றோம்.” என கூறினார்.

