ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் பிரயோசனமற்றவையாகவே உள்ளன. அவை இராஜதந்திர விஜயங்களாக அன்றி வெறுமனே சுற்றுப்பயணங்களாகவே அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிநாடுகளுக்கு செல்லும் விஜயம் வெறும் சுற்றுப்பயணம் ஆகும். அவர் நாடு நாடாக சென்று கொண்டிருக்கின்றார். இதனை விடுத்து அவரது வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. மாலைதீவு செல்ல முன்ன ஜேர்மனுக்கு விஜயம் செய்திருந்தார். அதனால் எமக்கு கிடைத்த நன்மை என்ன? ஜேர்மனுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் என்ன?
அமெரிக்காவுக்கு சென்றிருந்தால் வரி தொடர்பில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு காண்பதற்காக சென்றிருக்கின்றார்கள் என்று என்னலாம் ஆனால் இவ்வாறான விஷயங்கள் எதற்காக இடம் பெறுகின்றன?எனவேதான் இவற்றை சாதாரண சுற்றுப் பயணம் என்று கூறுகின்றோம். இதற்கு செலவிடுவது யார்?
ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என நாம் கூறவில்லை. ஆனால் அந்த ஒவ்வொரு விஜயத்தின் மூலமும் நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.
மறுபுறம் மீண்டும் கொள்கலன் சர்ச்சையொன்று உருவாகியுள்ளது. எமக்கு கிடைத்த தகவலின் படி சுங்கத்தினைகளத்தால் தடுத்து வைக்க வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் சுமார் 400 கொள்கலன்களில் உப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உப்பு தொகை எதற்காக உப்பு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது? அவற்றின் தரம் மற்றும் அவற்றை விடுவிப்பதில் உள்ள ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே அவை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஆனால் இதே கொள்கலன்களுடன் வந்த மேலும் ஆறு கொள்கலன்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாத்திரம் எதற்காக விசேட சலுகை வழங்கப்பட்டது என்பதை எமது கேள்வியாகும் என்றார்.