Monday, June 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவோம் |  ஜனாதிபதி

June 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை  நாட்டில் உருவாக்கப்படும்  என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்காக,  மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம்    ஈடுபட்டுள்ளதாகவும்,  அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, திங்கட்கிழமை (16) முற்பகல் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற “இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்” (Sri Lanka’s Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில்  பிரதான உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் மேலோட்டமான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகியுள்ள போதிலும், அந்த நிலைமையை பலமாக நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய பொருளாதார மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நாடு பல பொருளாதார வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் இலங்கையின் அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி (ECF) வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை, 

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாடாக, நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக ஆழமான நெருக்கடியின் விளைவுகளை நாம் எதிர்கொண்டோம். அதன்போது நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் இருந்தன. பழைய தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையில் தொடர்வதா,  அல்லது நமது நாட்டை மீண்டும் வெற்றிபெறச் செய்ய புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா, என்ற  இரண்டு விடயங்கள் நமது முன்னே இருந்தன. 

இன்று, நாம் தேர்ந்தெடுத்த பாதை நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும். அதில், அரசியல் அதிகாரத்திற்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அதேபோல், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது.

மேலும், இந்த மறுசீரமைப்புகளின்போது,பாதிக்கப்பட்ட மக்களுக்கே இதில் மிகப்பெரிய பங்கு இருந்தது. அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்தனர்.

இன்று, ஒரு நாடாக நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய முடிந்தது, மேலும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு டொலரை நிலையாக பேண முடிந்தது. எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்டவும், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு கையிருப்புக்களை உருவாக்கவும் முடிந்தது. இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக் காரணிகளில் மிகவும் வலுவான நிலைபேற்றுத் தன்மையை பார்க்க முடிகிறது. ஆனால் நெருக்கடியின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறவில்லை. உள்நாட்டில் நெருக்கடி இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, மேலோட்டமாக ஸ்திரத்தன்மை இருந்தாலும், அந்த நிலைமையை ஸ்திரப்படுத்தவும், பொருளாதாரத்தை, அது இருக்கும் இடத்திலிருந்து உயர்த்தவும் புதிய மறுசீரமைப்புகளும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களும் அவசியம் ஆகும். பல முக்கியமான காரணிகள் குறித்து நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், இந்த நெருக்கடியை வெற்றி கொள்ளவும் ஒரு வலுவான அரச சேவை அவசியம். ஆனால் அந்த அரச சேவைக்காக நாம் சுமக்கும் செலவு மிகப்பெரியது. இன்று, நாம் சுமக்கக்கூடாத ஒரு செலவைச் சுமக்கிறோம். எனவே, வலுவான அரச சேவையை உருவாக்குவதோடு, பிரஜைகளுக்கு மிகக் குறைந்த செலவில் அந்த சேவையை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. சில அரச நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம்.

அந்த அரச நிறுவனங்கள் அந்தக் கால சமூக-பொருளாதார சூழ்நிலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டமைக்கப்பட்டன. இன்று, அந்தப் பொருளாதார மற்றும் சமூக நிலைமை மாறிவிட்டது. சில நிறுவனங்களின் இருப்பு கூட தேவையற்றுப்போய் விட்டது. எனவே, நாம் அதைச் செய்ய வேண்டும். மேலும், ஒரே செயல்பாட்டிற்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை நாம் இணைக்க வேண்டும்.

மேலும், சில அரச நிறுவனங்களின் நோக்கமும் இலக்குகளும் மாற்றப்பட வேண்டும். எனவே, இந்த ஸ்திரத்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல, அரச கட்டமைப்பின் வலுவான மாற்றம் தேவை. அதை மிகவும் வலுவாக செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது அரச பொறிமுறை முழுவதும் பரவலாக இருக்கும் செயற்திறனின்மை, குறிப்பாக ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். அண்மைய கால செய்தி அறிக்கைகளைப் பார்க்கும்போது, நமது நாடு எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

பொலிஸாருக்குப்  பயந்து பொலிஸ் மா அதிபர் ஒளிந்து கொண்டிருக்கிறார். சிறைச்சாலைகள் ஆணையாளர் சிறையில் அடைக்கப்படுகிறார்.  போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியானால் நமது அரச கட்டமைப்பு எங்கே செல்கிறது? திறமையின்மை, இலஞ்சம் மற்றும் ஊழல் இந்த நெருக்கடிக்கு ஒரு பெரிய பாதையை உருவாக்கின.

இலஞ்சம் என்பது அந்த நேரத்தில் நடக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. இலஞ்சம் மற்றும் ஊழல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மறுபுறம், இலஞ்சம் மற்றும் ஊழல் நமக்கு தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தியது. அவை இன்றும் நமக்கு ஒரு சுமையாக மாறிவிட்டன. எனவே, இந்த சூழ்நிலையை விட்டு மீண்டு வர, அரச நிறுவனங்களை திறமையாக்குவதும், இலஞ்சம் மற்றும் ஊழலை தீர்க்கமாக தோற்கடிப்பதும் அவசியம். ஒரு நாடாக நாங்கள் அதற்கு உறுதிபூண்டுள்ளோம்.

நமது அரச நிறுவனங்கள் , குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான முக்கியமான பகுதிகளில், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது வலுசக்தி சந்தை மற்றும் நிதிச் சந்தை மிகச் சிறிய சந்தைகள் ஆகும்.

எனவே, நம்மைப் போன்ற ஒரு நாட்டில், ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது. ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்தை எதிர்கொள்ள, அரசாங்கம் சில பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது.

குறிப்பாக மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பொருளாதாரத்துடனும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அந்த நிறுவனங்களை நடத்துவதில் பொதுமக்கள் சுமையைச் சுமக்கக்கூடாது. எனவே, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலைகள் சீர் செய்யப்பட வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைப் பொறுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை   நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையை பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அதேபோன்று, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை வலுப்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். பிரஜைகள் அந்த சேவைகளின் செலவை  செலுத்தி, அந்த சேவைகளைப் பெற வேண்டும். இருப்பினும், சில குறைந்த வருமானம் பெறுவோர் இருப்பதையும் நாங்கள் அறிவோம். பொருளாதார மறுசீரமைப்புகளின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை காத்திருக்கச் சொல்ல நமக்கு உரிமை இல்லை. பலன்கள் அவர்களுக்கு செல்லும் வரை நாம் அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நீதியான அரசின் பொறுப்பு. எந்த நேரத்திலும், பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடாத ஒரு பிரிவினர் சமூகத்தில் உள்ளனர்.

முதியோராக  இருக்கலாம், ஊனமுற்றவர்களாக இருக்கலாம், அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்து பொருளாதாரத்தில் இணைய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபடாத மற்றும் இணைக்க முடியாத ஒரு சமூகம் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும்.

அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த சமூகத்தைப் பற்றி குறிப்பிடாமல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இது மனிதநேயம், நீதி மற்றும் நியாயம் பற்றிய கேள்வி. எனவே, இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்களிடம் உள்ளது. இது அரசியல்மயமாக்கப்பட்ட மானியத் திட்டம் அல்ல. அதை சமூக நீதி, சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பு பற்றிய கேள்வியாகக் கருத நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் அனுபவத்தின்படி,  நிவாரணத் திட்டங்கள் எப்போதும் அரசியல்மயமாக்கப்பட்ட திட்டங்களாக மாறிவிட்டன. அரசியலுக்காக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்பதை நான் பொறுப்புடன் உங்களுக்குச் கூறுகிறேன்.

மறுபுறம், பல துறைகளில் நிலையான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம். ஆனால் இலக்குகளை விரைவாக அடைய வேண்டிய பல பகுதிகள் இன்னும் உள்ளன. முதலில், நாம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க வேண்டும். கடந்த பல தசாப்தங்களைப் பார்க்கும்போது, அந்த குறிப்பிட்ட தருணத்தில், உலகின் பொருளாதார இயல்புடன், பொருளாதார செயற்பாடுகளையும் நாம் பார்த்தால், போதுமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கத் தவறிய ஒரு நாடு நாம். எனவே, போதுமான அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஈர்க்க வேண்டும்.

ஆனால் அதை மீண்டும் கொண்டு வருவது ஒரு சவாலாகும். நாம் மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இடத்தில் இல்லை. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து மீள்வதற்கு நாம் போராடும் இடத்தில் இருக்கிறோம். நமது நிதிச் சந்தைகள் மீதான நம்பிக்கை வீழ்ச்சி கண்டது. அன்றாடப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டொலர் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருந்தது. அதிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். 

ஆனால், முதலீட்டை ஈர்க்க அது போதுமானதா? முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முதலீட்டிற்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குவதிலும் சில சலுகைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

நமது நாட்டில் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய உற்பத்தியையும் எவ்வாறு மீட்டெடுப்பது? என்ற ஒரு கேள்வி உள்ளது. அண்மைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஏராளமான சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சியடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் 90% க்கும் அதிகமானோர் தங்கள் நிர்வாகப் பிழைகள் அல்லது வணிகப் பிழைகள் காரணமாக பாதிக்கப்படவில்லை, மாறாக பொதுவான பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை அவர்கள் அனுபவித்ததால் பாதிக்கப்பட்டனர். எனவே, அவற்றை மீட்டெடுக்க நாம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து மேலும் ஒரு படி முன்னேற, நாம் இந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார விரிவாக்கமும் நம் நாட்டில் முக்கியமானவை. கிராமப்புற மக்கள் பொருளாதாரத்திலிருந்து நீங்கியுள்ளனர். பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த தரவுகளைப் பற்றி நாம் நிறைய பேசலாம். ஆனால் தரவுகளில் பிரதிபலிக்காத ஒரு உண்மை உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணிகள் மக்களுக்கு நல்ல பலன்களைக் கொண்டுவர வேண்டுமென்றால், பொருளாதார விரிவாக்கம் அவசியம்.

எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், தொலைதூர கிராமங்களின் பிரஜைகளை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் தேவையான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாம் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 

எனவே, தற்போதைய பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்தி, இந்த நிலைமையை இன்னும் வலுப்படுத்தும் ஒரு பெரிய பணி நமக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவிற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எமது மக்களின் பொறுத்துக்கொள்ளும் அர்ப்பணிப்புக்கும்  நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல, சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்னெடுக்கும்  கடைசித் திட்டமாக இதை மாற்றுவதே எமது நோக்கம். அதற்கான எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் எங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் நாட்டின் இறையாண்மை நிலைத்திருக்காது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் சுயாட்சி நிலைத்திருக்காது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமது சுயாட்சியையும் இறையாண்மையையும் இழந்துவிட்டோம்.

எனவே, இதன் இறுதி விளைவாக, ஒரு தேசமாக நாம் சுயாட்சியையும் இறையாண்மையையும் பெற வேண்டும். அதற்காக ஒரு கடுமையான முயற்சி உள்ளது. விட்டுக்கொடுக்காத ஒரு முயற்சி உள்ளது.

அதற்காக நிறைவு செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அந்தப் பணியை செய்வதற்கு  அரசியல் அதிகாரமாக எமது பங்களிப்பும், அரச அதிகாரிகள் என்ற வகையில் உங்கள் பொறுப்பு மற்றும் பொதுமக்களாக உங்கள் ஆதரவையும்  நான் எதிர்பார்க்கிறேன்.

Previous Post

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

Next Post

தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

Next Post
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு !

தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

June 16, 2025
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் -அரசாங்கம் அனுமதி

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு – ஐ.நா எச்சரிக்கை

June 16, 2025
வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

June 16, 2025
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

June 16, 2025

Recent News

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

June 16, 2025
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் -அரசாங்கம் அனுமதி

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு – ஐ.நா எச்சரிக்கை

June 16, 2025
வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

June 16, 2025
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

June 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures