உங்கள் ஊர் தேடி வரும் இந்து–சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக நாளை 10 ஆம் திகதி வடகொழும்பிலும், 17ஆம் திகதி தென் கொழும்பிலும், 18ஆம் திகதி அவிசாவளையிலும் நடைபெறவுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் உடனடியாக இந்த நடமாடு சேவை நடத்தப்படும். இதில் இந்து குருமார்கள், அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், இந்து மன்ற செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,
எமது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால், “உதயம் – மக்கள் சேவை – உங்கள் ஊர் தேடி வரும் அரச சேவை” என்ற பெயரில் நடத்தப்படும் இந்த இந்து–சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை முதலில் கொழும்பு மாவட்டத்தில் பின்வரும் மூன்று இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் நடைபெறவுள்ளன.
(1)கொழும்பு வடக்குக்கான முதலாம் சேவை, நாளை சனிக்கிழமை மு.ப. 9.00 – பி.ப 4.00 மணிவரை கொழும்பு வடக்கு – நாவலர் மண்டபத்தில் இடம்பெறும்
(2)கொழும்பு தெற்குக்கான இரண்டாம் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 – பி.ப 4.00 மணிவரை கொழும்பு தெற்கு – சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறும்.
(3)அவிசாவளைக்கான மூன்றாம் சேவை, 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.00 – பி.ப 4.00 மணிவரை அவிசாவளை – புவக்பிட்டிய சீசீ தமிழ் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளன.
இதையடுத்து ஏனைய மாவட்டங்களிலும் இந்த இந்து–-சைவ நடமாடும் சேவை நடைபெறும். இவற்றுக்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்நடமாடும் சேவையில் பெறக்கூடிய சேவைகள்
• இலங்கை தேசிய இந்து மகாசபை உருவாக்கம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துதல்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ் கலைமன்றங்கள் என்பவற்றை பதிவு செய்தல்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ்க் கலைமன்றங்கள் என்பவற்றின் தகவல்களை பெறுதலும் மீள்பதிவு செய்தலும்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ்க் கலைமன்றங்கள் என்பவற்றின் நிர்வாக நிதி நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கல்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள் என்பன எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிணக்குகளுக்குத் தீர்வு காணல்.
• இந்து அறநெறிப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குதல்.
• இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் தகவல்களை பெறுதலும் பதிவு செய்தலும்.
• இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.
• இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளல்.
• இந்து குருமார்களின் தகவல்களை பெறுதலும் பதிவு செய்தலும்.
• இந்து குருமார்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.
• தமிழ் கலைஞர்களின் தகவல்களை பெறுதலும் பதிவு செய்தலும்.
இவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு: பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, 248 1/1, காலி வீதி, கொழும்பு-4 என்ற விலாசத்தில் அமைந்துள்ள அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல. 011 2552641.