கேரளா வாசிகளுக்கு ரொம்பவே அறிமுகமானவர்கள் தான் விஜயன் – மோகனா தம்பதியினர். கொச்சி காந்திநகரில் பாலாஜி கபே என்கிற சாதாரண, அதேசமயம் புகழ்பெற்ற ஒரு சிற்றுண்டி விடுதியை நடத்தி வரும் இந்த தம்பதியினர், தங்கள் சம்பாத்தியத்தில், ஆண்டுதோறும் ஏதோ ஒரு நாட்டிற்கு சுற்றிப் பார்க்க சுற்றுலா கிளம்பி விடுகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனாலேயே கேரளாவில் இவர்கள் ரொம்பவே பிரபலம்.
இந்நிலையில் நடிகர் மோகன்லால், இவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்தளித்து கவுரவப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த தம்பதியினர் தாங்கள் நடத்தும் ஹோட்டல் வியாபாரத்தில் தங்களுக்குள்ள பிரச்சனைகளையும் சமாளித்து அதே சமயம் தாங்கள் விரும்பியபடி நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது தான், என்னை ஊக்கப்படுத்திய விஷயம். என்னுடைய வீட்டிற்கு வந்தது மட்டுமல்லாமல் எனக்காக அருமையான உணவையும் சமைத்து எடுத்து வந்தது நெகிழ வைத்தது” என்றார்.

