தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் கவலைக்குரியதாக உள்ளது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலா பயணிகள் ஒழுங்குப்படுத்துனர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலா பயணிகள் ஒழுங்குப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட ஒழுங்குபடுத்தினர் காமினி திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் புகையிரதங்களில் பயணம் செய்வதற்கு அதிகம் விருப்பம் கொள்வார்கள்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கொழும்பில் இருந்து பதுளைக்கு புகையிரதத்தில் பயணம் செய்வதை எதிர்பார்த்திருந்த போது புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்,இதனை அவர்கள் தங்களின் நாட்டு மக்களிடம் குறிப்பிடும் போது இலங்கையின் சுற்றுலா சேவைத்துறை பாதிக்கப்படும்.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடைந்தால் மாத்திரமே பொருளாதாரம் மேம்படும், ஆகவே தொழிற்சங்கத்தினரது பணிபுறக்கணிப்பு போராட்டம் கவலைக்குரியது.நாட்டை கருத்தில் கொண்டாவது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.