பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் ஒரு குழுவில் இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளை இலங்கை எதிர்த்தாடுவது உறுதியாகி உள்ளது.
ஏ குழுவிலிருந்து சுப்பர் 8க்கு தெரிவாகும் இரண்டாவது அணியை தனது கடைசிப் பொட்டியில் இலங்கை சந்திக்கும்.

மற்றைய குழுவில் இந்தியா, ஸிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன.
சுப்பர் 8 சுற்றில் இலங்கை தனது முதலாவது போட்டியில் இங்கிலாந்தை பல்லேகலையில் பெப்ரவரி 22ஆம் திகதி பிற்பகல் எதிர்த்தாடும்.
இலங்கை – நியூஸிலாந்து அணிகள் மோதும் சுப்பர் 8 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 25ஆம் திகதி இரவு நடைபெறும்.
இலங்கை தனது கடைசிப் போட்டியில் எந்த அணியை எதிர்த்தாடும் என்பது பாகிஸ்தானுக்கும் நமிபியாவுக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள போட்டி முடிவுடன் தெரிய வரும்.
சுப்பர் 8 சுற்றில் ஸிம்பாப்வே
அவுஸ்திரேலியா வெளியேறியது
இயற்கை அன்னையின் தயவால் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் விளையாட ஸிம்பாப்வே தகுதிபெற்றுக்கொண்டது. அதேவேளை முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியாவின் வாய்ப்பு பறிபோனது.

ஸிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலையில் இன்று பிற்பகல் நடைபெறவிருந்த ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டி இயற்கை அன்னையின் சீற்றத்தால் ஒரு பந்துதானும் வீசப்படாமல் முழுமையாக கைவிடப்பட்டது.
இதன் காரணமாக ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதனை அடுத்து பி குழுவிலிருந்து ஸிம்பாப்வே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

