சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் (09) குருநாகல் வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்டுபேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், அரசியல் நெருக்கடி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளது. அதேவேளை, எமது கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து சிலர் வைத்திருக்கின்ற தப்பபிப்பிராயங்களையும் அது போக்கியுள்ளது. தேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களது உறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன. நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.
அரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது.

