சாத்தான் தி டார்க்: திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஈ சி எஸ் பிக்சர்ஸ்
நடிகர்கள் : எஃப் ஜெ, ஐரா, மோனா பத்ரா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் .
இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம்
மதிப்பீடு : 2.5 / 5
ஹாரர் திரில்லர் திரைப்படங்கள் என்றாலே அதற்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்களுக்காக ஓரளவு பிரபலமான நடிகர்கள் நடித்திருக்கும் ‘சாத்தான் : தி டார்க் ,’ திரைப்படம் தமிழில் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை உளவியல் ரீதியாக அதிர்வை உண்டாக்கியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அஸ்தினாபுரம் எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மக்களில் ஒரு குழுவினர் சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைத்து அத்தகைய வழிபாட்டை தொடர்கிறார்கள்.
காக்கை உருவில் சிலையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த சாத்தானுக்கு உயிர் பலி கொடுத்தால் விரும்பியது நடைபெறும் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருக்கிறது.
இவை எல்லாம் கடந்த கால வரலாறாக இருக்க… நிகழ்காலத்தில் அத்தகைய கிராமத்தில் மீண்டும் பல அகால மரணங்கள்- மர்மமான மரணங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பான காவல்துறை விசாரணையும் தொடங்குகிறது.
இந்நிலையில் அங்கு வசிக்கும் மெர்சிலின் ( மோனா பத்ரா) என்ற பெண்மணிக்கு திடீர் என அமானுஷ்யமான ஆற்றல் வெளிப்படுகிறது. அத்துடன் அவர் தன்னை யாரோ ஒருவர் இயக்குவதாகவும் சொல்கிறார்.
இவருடைய மூத்த மகளான அலிஷா ( ஐரா) பாடசாலை ஒன்றில் பயில்கிறார். அந்த மாணவியை சக மாணவரான சாகர் ( எஃப் ஜே) என்பவர் ஒரு தலையாய் காதலிக்கிறார்.
ஒரு புள்ளியில் மெர்சிலினின் அமானுஷ்யமான பிடியில் அலிசா சிக்க.. அவரை மீட்பதற்காக சாகர் முயற்சிக்கிறார். அத்துடன் காவல்துறையின் விசாரணைக்கும் உதவுகிறார் சாகர்.
இவர்களுடைய தேடலில் அந்த ஊரில் நடைபெறும் மர்ம மரணங்களுக்கான பின்னணி என்ன என்பது தெரிய வருகிறது. அது என்ன என்பதும்? அதனை தடுப்பதற்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளித்ததா? இல்லையா? என்பதும் அலிசாவை ஒரு தலையாய் காதலித்த சாகரின் காதல் என்ன ஆனது? என்பதையும் விவரிப்பதும் தான் இப்படத்தின் கதை.
படத்தின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு சாத்தானின் வழிபாடு எப்படி தொடங்கியது என்பது குறித்த வரலாறு விவரிக்கப்படுகிறது. இது ரசிகர்களை எந்த வகையிலும் கவரவில்லை.
இதைத்தொடர்ந்து சம்பவங்கள் நடைபெறும் போது மெல்ல மெல்ல மெர்சிலின் கதாபாத்திரத்தின் பாரா நார்மல் ஒக்டிவிட்டி தொடர்பான செயலை கவனிக்க தொடங்கி அதன் பின்னணியில் உள்ள அமானுஷ்யத்தையும் பயங்கரத்தையும் உணரும் போதும் பயம் தொற்றிக் கொள்கிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் பின்னணி இசையும் சேர்ந்து கொள்கிறது.
அதன் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் ஹாரர் திரில்லருக்குரிய தருணங்களை பிரத்யேக ஒலி அமைப்பின் மூலமாகவே படக்குழுவினர் வழங்குகிறார்கள். அதிலும் சாத்தானின் வழிபாட்டு முறைகளில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் பார்வையாளர்களை மிரள வைக்கிறது.
1950 -1973- 1989 – என்று மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் நிகழ்வுகளை முன்னுக்கு பின் சொல்லி ரசிகர்களை அசரடித்திருக்கிறார்கள்.
ஒன்றின் மீதான அதீத நம்பிக்கை பக்தி என்றாலும்.. அதன் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை ..! என்ன நிகழ்த்தும்? எம்மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்? என்பதை இயக்குநர் தன் பாணியில் சொல்லி இருக்கிறார்.
பாடசாலையில் பயிலும் மாணவரான சாகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சுழல்’ இணைய தொடர் மூலம் அறிமுகமான நடிகர் எஃப் ஜே- தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
அலிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஐரா பாடசாலை மாணவியாக தோன்றுவது பொருத்தமாக இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தன்னால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மெர்சிலின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மோனா பத்ரா முழு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை பயமுறுத்துகிறார்.
கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊழியம் செய்யும் பெண்ணாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் கதாபாத்திரம் கதையின் முதன்மையான இடத்தை பிடித்திருந்தாலும்.. அவருக்கான காட்சிகள் குறைவு .
இருப்பினும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் விரிவாக விவரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான காட்சிகளில் தோன்றினாலும் தன் அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார் நடிகை சாந்தினி.
இதுபோன்ற ஹாரர் திரில்லர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு கணிசமாக இருக்கும். இப்படத்திலும் ஒளிப்பதிவாளர் பாலா ஜி. ராமசாமியுடன் இசையமைப்பாளர் அஸ்வின் கிருஷ்ணாவும் இணைந்து ரசிகர்களுக்கு சிறப்பான படைப்பு அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
சாத்தான் தி டார்க் – தி ஹார்க்.
