ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார் இந்தியாவின் ரோகித் சர்மா.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரண்டாவது போட்டி மொகாலியில் நடக்கிறது. இதில் முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஜோடி அபார துவக்கம் தந்தது. தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை ரோகித் சிதறடித்தார். பிரதீப் பந்தில் சிக்சர் அடித்த இவர், திசரா பெரேரா பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து மிரட்டிய ரோகித் ஒரு நாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர் 153 பந்தில் 13 பவுண்டரி, 12 சிக்சர் உட்பட மொத்தம் 208 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதன் சாதனை விவரம்:
முதல் வீரர்
ஒரு நாள் போட்டியில் அதிக இரட்டை சதம் (3) அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரோகித். இதற்கு முன், ஆஸ்திரேலியா (209 ரன், பெங்களூரு, 2013) இலங்கை (264 ரன், கோல்கட்டா, 2014) அணிகளுக்கு எதிராக இந்த இலக்கை எட்டி இருந்தார். ஒட்டுமொத்தமாக, ஒரு நாள் அரங்கில் அடிக்கப்பட்ட 7வது இரட்டை சதம் இதுவாகும். இந்தியாவின் சேவக், சச்சின், வெஸ்ட் இண்டீசின் கெய்ல், நியூசிலாந்தின் கப்டில் தலா ஒரு இரட்டை சதம் அடித்திருந்தனர்.
இரண்டாவது கேப்டன்
ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் இந்திய கேப்டனாக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் (208) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் சேவக் (219 ரன், எதிர்– வெ.இண்டீஸ், இந்துார், 2011) உள்ளார்.
2
ஒரு நாள் அரங்கில் குறைந்த போட்டியில் (2) சதம் எட்டிய இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் ரோகித். இதற்கு முன், காம்பிர், கோஹ்லிக்கும் சதம் எட்ட இரண்டு போட்டிகள் தேவைப்பட்டன. முதலிடத்தில் சச்சின் (ஒரு போட்டி) உள்ளார்.
6
இந்த ஆண்டில் இதுவரை ரோகித் 6 சதம் அடித்துள்ளார். இதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். சச்சின் (1996), டிராவிட் (1999), கோஹ்லி (2017) ஆகியோரும் தலா 6 சதம் அடித்துள்ளனர். முதலிரண்டு இடங்களை சச்சின் (9 சதம், 1998), கங்குலி (7 சதம், 2000) வகிக்கின்றனர்.