மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் அதற்கு இன்றுவரை பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதில் சட்ட சிக்கல் காணப்படுகின்றது. எனவே அந்த சட்ட சிக்கல் நீக்கப்படும் போது தேர்தல் ஆணைக்குழுவானது மாகாண சபை தேர்தலை நடாத்த எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருக்கின்றது தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம் சுபியான் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் (2026-2029) தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது அதன் போது கலந்து கொண்ட தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் வாக்களிப்பு பங்கேற்பை அதிகரித்தல், தேர்தல் சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் பங்களிப்பை அதிகரித்தல் போன்றவை மற்றும் எதிர்காலத் திட்டமிடல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
தேர்தல் முறையில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி புதிய சட்ட திட்டங்களை கொண்டு வருதல், நவீன தொலை தொடர்பு வசதிகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர் இடாப்பு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதில் அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் கலந்துகொண்டு பங்களிப்பு மூலோபாய எதிர்கால திட்டம் (2026-2029) தொடர்பான தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்தனர்
இந்நிகழ்வில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ்.மாதவ, திட்டமிடல் பணிப்பாளர் சன்ன பி.டி. சில்வா மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.