பாதாள உலகக்குழுத் தலைவர் என அறியப்படும் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தினுள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபரும், தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினுள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது.
Beaches & Islands
அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று பிறந்த தின கொண்டாட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதற்கமைய இஷாரா செவ்வந்தியின் பிறந்த தின கொண்டாட்ட ஏற்பாடுகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இடம்பெற உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே, அவர் கொண்டாட்ட ஏற்பாடுகளில் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் விசேட படையணி தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு பொலிஸ் அதிகாரிகள் எந்நேரமும் தமது தொழில்சார் ஒழுக்கக்கோவையைப் பின்பற்றச் செயற்படுவது அவசியம். அவ்வாறிருக்கையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்டமை குறித்து பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

