தங்காலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி திடீரென கைது செய்யப்பட்டமையினால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சாரதி மது அருந்தியுள்ளார் என கூறி பேருந்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அந்த பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். இதனால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை காரணமாக பல்வேறு அத்தியாவசிய கடமைகளுக்காக சென்ற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளின் எதிர்ப்பை மீறி பொலிஸ் அதிகாரி பேருந்தை கொண்டு செல்ல முயற்சித்தமையால், மீண்டும் பணம் செலுத்தி குறித்த பயணிகள் வேறு ஒரு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
சாரதி மது அருந்தியுள்ளார் என்பதனை அறிந்து அவரை கைது செய்தமை குறித்து பாராட்டப்பட்ட போதும், பயணிகளை நடத்திய விதம் குறித்து பொலிஸார் மீது கடுமையாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சாரதி முதல் நாள் இரவு மது அருந்தியுள்ளார் எனவும், அடுத்த நாள் காலை அவர் மது அருந்தவில்லை எனவும் வைத்திய சோதனையில் உறுதி செய்யப்பட்டமையினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.