கொழும்பு – மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், வாகனங்களை பழுதுபார்த்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்ற சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 10 , மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வாகனங்களை பழுதுபார்த்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றுள்ளனர்.
இதன்போது துப்பாக்கிதாரிகளிடமிருந்த துப்பாக்கி செயலிழந்ததால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை இலக்கு வைத்தே இந்த கொலை முயற்சி இடம்பெற்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தரையில் விழுந்து கிடந்த தோட்டா ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரியிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.