கொரோனாஇன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சீனா ஜப்பான்இ அமெரிக்கா பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ” கொரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதேநேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் பிறப்பித்துள்ளேன். எத்தகைய ஒரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.