ஹிங்குரன்கொட பகுதியில் இராணுவ சீருடை, கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அரச புலனாய்வுத் துறை அதிகாரிகளினால் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (10) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு, தோட்டாக்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ஹிங்குரன்கொட, கிம்புலாவள பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 46 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிரடிப்படையினர் சந்தேக நபரை ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஹிங்குரன்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஹிங்குரன்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.