குவைத் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் குவைத்தில் வாழும் இலங்கையர்கள் குறித்து இலங்கைத் தூதரகம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகிறது. ஈரானின் தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பதைத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குவைத்தில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இது குறித்து அநாவசியமான அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலைமையைத் தூதரகம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விவகாரங்கள் தொடர்பில் குவைத் பாதுகாப்புப் பிரிவினருடன் தூதரகம் நேரடித் தொடர்பில் உள்ளது. ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழலில், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
