இறுதிசுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார். தற்போது வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் ரித்திகா.
பாலிவுட் கலைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ள இந்த குறும்படத்தின் பெயர் ஐ யம் சாரி. இது பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளை பற்றி பேசும் மியூசிக்கல் குறும்படம். இதனை தேசிய விருது பெற்ற அஸ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார்.
“இது பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை பேசுகிற படம். பெண்களின் பாதுகாப்பை அரசு இன்னும் பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிற படம்” என்கிறார் தயாரிப்பாளர் சாஜித் குர்ஷித்.
“நானும் ஒரு பெண் என்பதால் பெண்கள் குறித்த இந்த விழிப்புணர்வு படத்தில் ஆர்வமுடன் நடித்தேன். பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நான் கூறி வருகிறேன். அதை பலமாக சொல்ல இந்தப் படம் உதவியது. விரைவில் ஹிந்திப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்” என்கிறார் ரித்திகா சிங்.