இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தூரில் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் பிடியைத் தனதாக்கிக்கொண்டுள்ளது.
மெத்யூ கியூன்மானின் முதலாவது 5 விக்கெட் குவியல், உஸ்மான் கவாஜாவின் அரைச் சதம் ஆகியன அவுஸ்திரேலியாவை பலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, கியூன்மான், நெதன் லயன் ஆகியோரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் முதலாவது இன்னிங்ஸில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி அவுஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா முதல் தடவையாக தொடரில் சோபிக்கத் தவறியது.
வீரர்களின் மோசமான அடி தெரிவுகள், கவனக்குறைவான துடுப்பாட்டம் ஆகியன அதன் வீழ்ச்சிக்கு காரணமாகின.
இந்திய அணியில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்திய அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. மதிய போசனை இடைவேளைக்கு சற்று பின்னர்வரையே இந்தியாவினால் துடுப்பெடுத்தாடக்கூடியதாக இருந்தது.
இந்திய துடுப்பாட்டத்தில் விராத் கோஹ்லி அதிகப்பட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட ஷுப்மான் கில் (21), ஸ்ரீகர் பாரத் (17), உமேஷ் யாதவ் (17), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (12), அக்சார் பட்டேல் (12) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மெத்யூ கியூன்மான் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 9 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நெதன் லயன் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11.2 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதமிருக்க இந்தியாவை விட 47 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.
உஸ்மான் கவாஜா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 60 ஓட்டங்களைப் பெற்றார்.
மார்னுஸ் லபுஸ்சான் 31 ஓட்டங்களையும் மீண்டும் தலைமைப் பதவியைத் தற்காலிகமாக ஏற்ற ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
வழமையான அணித் தலைவர் பெட் கமின்ஸின் தாயார் சுகவீனமுற்றிருப்பதால் அவர் நாடு திரும்பியுள்ளார்.
இந்திய பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.