காவிரி வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவிரி வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக 4 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான அமிதவராய் பிப்ரவரி 23-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை கருத்தில் கொண்டு காவிரி வழக்கு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. முன்னதாக காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.
அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் மற்றும் ஏ.எம்.கன்வீல்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.இந்த மனுக்களை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் அப்போது மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், கர்நாடக அரசு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், காவிரி தொடர்பான விசாரணையை கடந்த மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அதுவரை தொடர்ந்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்பேரில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு தொடர்ந்து திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி முதல் காவிரி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் வாரத்தில் மூன்று வேலை நாட்கள் வீதம் மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு மட்டும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் அடுத்த 4 வாரத்தில் இறுதி உத்தரவு வழங்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் காவிரி வழக்கு விவகாரத்தில் நேற்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி அமித்தவராயின் பதவிக்காலம் வரும் மார்ச் 1ம் தேதியோடு முடிவடைய உள்ளதால் பிப்ரவரி 23ம் தேதிக்குள் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி இறுதி தீர்ப்பு வருவதால் இருமாநிலத்திலும் எந்த அசம்பாவிதங்கள் நடக்காத இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.