மன்னார், நறுவிலிக் குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட ஆயுள்வேத மருத்துவமனை வளாகத்தில் வளர்க்கப்படும் மூலிகைச் செடிகள் கால்நடை களால் சேதப்படுத்தப்படுகின்றன என வடக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நேற்றுச் சென்றார். அதன்போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-குறித்த ஆயுள்வேத மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. மருத்துவமனையின் சுற்று வேலி முற்கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகள் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து மூலிகைச் செடிகளை உண்கின்றன.சுற்று வேலியை முழுமைப்படுத்திய போதும், சுற்று வேலியின் முற்கம்பிகள் வெட்டப்பட்டுள்ளன. அதனூடாக கால்நடைகள் உள்நுழைகின்றன. மருத்துவனையில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் இதனால் பல்வேறு பிரச்சினை களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு தொகுதி ஆடுகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை உண்பதை அமைச்சர் நேரடியாக அவதானித்தார். கிராம அலுவலரை உடனடியாகத் தொடர்பு கொண்ட சுகாதார அமைச்சர் இது தொடர்பில் ஆடுகளின் உரிமையாளரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றார்.
தொடர்ந்து இவ்வாறு நடந்தால் கால்நடைகள் பிடிக்கப்பட்டுப் பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தினார். மருத்துவமனையில் நிலவும் ஏனைய தேவைகள் தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

