காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் இது மொத்த உற்பத்தியில் 0.4 சதவீதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவில் இருந்து எதிர்பாராத சுமை என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே உலக வங்கி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தினால் வருடாந்தம் வீடுகள், உட்கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் நிவாரணத்திற்காக 313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 32 பில்லியன் ரூபாய் இழப்பு வெள்ளத்தினால் ஏற்படுகின்றது. கடும் காற்றின் காரணமாக 11 பில்லியன் ரூபாய் இழப்பும் வரட்சி மற்றும் மண் சரிவினால் 5.2 பில்லியன் ரூபாயும் சேதங்களுக்காக 1.8 பில்லியன் ரூபாயும் இழப்பு ஏற்படுகின்றது.
2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 213 பேர் உயிரிழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
1.2 மில்லியன் ரூபாயை வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு அரசாங்கம் செலவிட்டுள்ளது. உலகிலேயே காலநிலை மாற்றத்தினால் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காலநிலை மாற்றம் பாதுகாக்கப்பட்ட அரிசி தயாரிப்பையும் சீர் குலைக்கின்றது.
வரட்சியின் காரணமாக நாட்டின் மின்சார தேவையைச் சமாளிப்பதற்காக அனல்மின் உற்பத்தியை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதற்காக 560 மில்லியன் டொலர்களை 2017ஆம் ஆண்டு அரசாங்கம் செலவிட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியின் 0.7 சதவீதமாகும் என குறிப்பிடபடுகிறது .

