ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.அகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் மத்தியப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் சிலை புதன்கிழமை அன்று நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.இந்த தகவலை உறுதிசெய்த பல்கலைக்கழக நிர்வாகம், சிலையை இடம் மாற்றிய சம்பவத்துக்கு வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.
“காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவதே அவரது சிலை வைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம். ஆனால், அவர் இதுபோன்ற (இனவெறி கொண்டவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது) விடயங்களுக்கு ஆதரவானவர் என்றால், அவரது சிலை எங்களது வளாகத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.”
20ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர்களில் காந்தியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதற்காக அவர் அறியப்படுகிறார்.
காந்தி தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள மக்களுக்காக போராடினாலும் கூட, கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது.
தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் இனவெறி மிக்க வார்த்தையை (கஃபீர்ஸ்) பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை “மேலானவர்கள்” என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

