காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐநாவிடம் இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோர முடியும் அதற்கு இவர்கள் யார்? என மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போது அவர்கள் மேலும் தெரிவித்தாவது, எங்களது போராட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைவுப் பெற்றுள்ளன. இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. கிளிநொச்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலுவலகத்திற்கு சில வருடங்களுக்கு முன் பிரதமர் ரணில் வருகை தந்திருந்த போது சொன்னார் மகிந்தவின் பிள்ளைகள் காணாமல் போயிருந்தால் அவர்கள் இப்படியிருப்பார்களா? எனவே நான் பதவிக்கு வந்தவுடன் உங்களுக்கு தீர்வை தருவேன் என்றார்.
இதன்போது பிள்ளை காணாமல் ஆக்கப்பட்ட தாய் ஒருவர் அவரின் காலில் வீழ்ந்து கதறி அழுதார் தனது ஒரேயொரு மகனை மீட்டுத்தருமாறு. ஆனால் பதவிக்கு வந்த ரணில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என யாழப்பாணத்திலும், மறப்போம் மன்னிப்போம் என கிளிநொச்சியிலும் தெரிவித்துள்ளார்.
இவர் இவ்வாறு தெரிவித்து போது எங்களது வாக்குகளால் பதவிக்கு வந்த பிரதிநிதிகள் வாய் மூடி மௌனமாக இருந்துள்ளனர். அது மாத்திரமன்றி கடந்த காலத்தில் நடந்துகொண்டது போன்று தற்போதும் இலங்கை விடயத்தில் ஐநாவுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்த அவர்கள் நாம் இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நம்பத் தயாரில்லை என்றும் தெரிவித்தனர்.
அத்தோடு தாம் எதிர்வரும் 25 திகதி நடத்தவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குமாறும் அனைத்து அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது மக்கள் ஆகியோரிடம் கோரியும் நிற்கின்றனர்.

