‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால், பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான விசாரணைகள், முதற் தடவையாக எதிர்வரும் 15 ஆம் திகதி திங்களன்று புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி இந்த மனு உயர் நீதிமன்றில் நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே, மேலதிக பரிசீலனைகள் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டன.
இதன்போது மனு மீதான பரிசீலினைகளில் இருந்து நீதியரசர் ஜனக் டி சில்வா விலகியதுடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் அங்கம் வகித்தமையை அவர் காரணமாக குறிப்பிட்டார்.
இதன்போதே முதற் தடவையாக, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயத்தை, மனுவில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி நரின் புள்ளே அறிவித்திருந்தார்.
கடந்த 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலிக்கப்பட்ட போது, அன்றைய தினம் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகரவுடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இல்லியாஸ், மூன்றாம் பிரதிவாதி (ரி.ஐ.டி. பணிப்பாளர்) தாக்கல் செய்துள்ள மட்டுப்படுத்தப்ப்ட்ட ஆட்சேபனைகளுக்கு எதிரான பதில் வாதங்களை சமர்ப்பித்தார்.
இந்நிலையிலேயே மனு மீதான மேலதிக பரிசீலனைகள் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ், குறித்த பிரிவின் வவுனியா கிளை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.ஜே. அனுரசாந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் 26 வயதான கவிஞர் அஹ்னாப், கவிஞராகவும் ஆசிரியராகவும் செயற்படுவதாகவும் அவர், பேருவலை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்துள்ளதாகவும் மனுதாரர் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து 4 ஆம் பிரதிவாதியான வவுனியா ரி.ஐ.டி. கிளை பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது அவரது வீட்டிலிருந்து 50 இற்கும் அதிகமான நவரசம் கவிதை தொகுப்பு புத்தகங்களும் மேலும் சில புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேகநபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப், தடுப்புக் காவலில் பெரும்பாலான நேரங்களில் கை விலங்கிட்டே வைக்கப்பட்டுள்ளதாகவும், நித்திரைக்கு செல்லும் நேரம் கூட அவ்வாறன நிலையிலேயே அவர் வைக்கப்ப்ட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்படும் போது கூறப்பட்ட காரணத்தை விட, தற்போது, பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடிடத்தில் அடிப்படைவாதம் போதனை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாபை சித்திரவதை செய்வதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள அஹ்னாபை அங்கு எலி கடித்துள்ளதாகவும் அவருக்கு முறையான சிகிச்சைகள் கூட அளிக்கப்படவில்லை என அம்மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள பீ 44230/8/20 எனும் வழக்கில் தனக்கு எதிரகவே ஒப்புதல் வாக்கு மூலம் வழங்க அஹ்னாப் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், அஹ்னாபின் தந்தையிடம், ஜாமியா நளிமீயா கலாபீடத்தில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக வாக்கு மூலம் வழங்க அஹ்னாபை சம்மதிக்க வைக்குமாறு பேசியதாகவும், அவ்வாறு வாக்கு மூலம் அளித்தால் சிறிது நாட்களில் அவரை விடுவிக்க முடியும் என கூறியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அஹ்னாபை அவரது சட்டத்தரணிகள் பார்வை இட முதலில் அனுமதிக்கப்படாத நிலையில், பின்னர் வழங்கப்பட்ட அனுமதியின் போது சட்டத்தரணியுடன் அவர் உரையாடுவதை ரி.ஐ.டி. அதிகாரிகள் ஒலிப்பதிவு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாபின், அரசில் அமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள சிந்தனை செய்யும், மனச் சாட்சியை பின்பற்றும் மதச் சுதந்திரம் ( 10 ஆம் உறுப்புரை), சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் (11 ஆம் உறுப்புரை), சமத்துவத்துக்கான உரிமை (12 ஆம் உறுப்புரை), எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான உரிமை( 13 ஆம் உறுப்புரை), பேச்சு, தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் ( 14 ஆம் உறுப்புரை) உள்ளிட்டவை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பரிவிக்குமாரறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர்.
அத்துடன் அஹ்னாபின் தடுப்புக் காவலுக்கு எதிராக இடைக்கால தடை விதித்து அவரை உடனடியாக விடுவிக்கவும், மனுவை விசாரணை செய்து நட்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவைப் பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்றிடம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவூடாக கோரப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]