கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர். வேட்டை கும்பலை சரணடைய செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். அப்போது வேட்டை கும்பல் கர்நாடக வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக வனத்துறையினர் பதிலுக்கு மான் வேட்டையில் ஈடுபட்ட தமிழக வேட்டை கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது வேட்டை கும்பல் மான் மற்றும் துப்பாக்கிகளை அங்கேயே போட்டுவிட்டு ஆற்றில் குதித்து கரை நீந்தி ரவி மற்றும் இளையபெருமாள் தப்பி ஓட்டம் பிடித்தனர். ராஜாவை தேடி வந்தனர்.
வேட்டை கும்பல் விட்டுச் சென்ற நாட்டுத் துப்பாக்கி, இரண்டு புள்ளிமான் செல்போன் , மற்றும் பரிசல் ஆகியவற்றை பறிமுதல் செய்து கர்நாடக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக கர்நாடக வனத்துறையினர் சாம்ராஜ்நகர், மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கர்நாடக போலீசார் தப்பி ஓடிய மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு அடிபட்ட ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் கிடந்தது. ராஜாவின் சடலத்தை காண கிராம மக்களும், உறவினர்களும் ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் வனத்துறையினர் அங்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதட்டத்தை தணிக்க இரு மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரை கர்நாடகா வனத்துறையினர் சுட்டு கொன்றனர். இந்நிலையில் மீண்டும் வேட்டைக்குச் சென்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.