“தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை என கூறினால் அது தவறானதொரு கருத்தாகும். முகாம்களிலிருந்து வெளியே சென்றவர்களினால் நோய் தொற்று பரவியதாக இல்லை. புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து வெளியே சென்றவர்களினாலேயே தொற்று பரவியுள்ளது” என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருக்கின்றார்.
அலரி மாளிகையில் ஊடகப் பிரதானிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நடத்திய சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவத் தளபதி கோவிட் பரவல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது
“முதல் முறையாக கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலேயே நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதிலேயே நாம் அறிந்துக் கொண்டோம் ஆரம்பம் கந்தகாடு என்று. முகாமுக்குள் இருந்தவர்கள், அதன் ஆலோசகர்கள் விடுமுறையில் சென்றிருந்த அதிகாரிகள் அனைவரையும் முகாமுக்குள் அழைத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். அத்துடன் முகாமிலிருந்து விடுமுறையில் சென்றவர்களின் குடும்பத்தாரையும் முகாமுக்குள் அழைத்து தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்; புனர்வாழ்வு நிலையத்தில் திடீரென இவ்வாறானதொரு நிலை எவ்வாறு ஏற்பட்டது?
இராணுவ தளபதி ; பொரள்ளை மற்றும் கொழும்பு தொற்றாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களை நாம் தனிமைப்படுத்தியது இரண்டு இடங்களில். அது கந்தகாடு கல்கந்த மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களாகும். அவர்களை தனிமைப்படுத்தலின் பின்னர் சமூகத்துடன் இணைப்பதா இல்லையா என்ற விடயம் தோன்றியது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே அங்கிருந்தனர்.

