சட்டவிரோதமாக குடியேற கண்டெய்னர் லாரி மூலம் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவில் குடியேற பலர் சட்ட விரோதமான வகையில் ஊடுருவி வருகின்றனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரம் மெக்சிகோ எல்லையில் உள்ளது. நேற்று அங்குள்ள வால்மார்ட் வணிக வளாகத்துக்கு ஒரு கண்டெய்னர் லாரி வந்து, அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
சிறிது நேரம் கழித்து வணிக வளாக ஊழியர்கள் அதை திறந்து பார்த்ததில் உள்ளே 8 பேர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. அவர்களில் 2 பேர் குழந்தைகள் ஆவர். இவர்களை தவிர மேலும் 30 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 20 பேர் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
உடனே அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படு வருகிறது. இவர்கள் அனைவரும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள். காற்று வசதியின்மை, கடும் வெப்பம் காரணமாக மூச்சு திணறி பலியாகி இருப்பது குடியுரிமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆட்களை கடத்தி வந்ததாக கண்டெய்னர் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.