கண்டி – பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பூவெலிகட பகுதியில் நேற்று காலை 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
குறித்த கட்டடம் நிலையற்ற நிலத்தில் அமைக்கப்பட்டமையின் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கட்டடத்திற்கு அருகில் உள்ள 3 வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

