தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மீது, அந்த கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக கனடா நாட்டு பிரஜையான சிவசுப்பிரமணியம் செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், இன்றைய தினம் கட்சியின் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
யாழ். நாச்சியார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எனினும், இந்த கலந்துரையாடலுக்கு கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இதனையடுத்து, கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று கட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்காமல், எவ்வாறு கூட்டம் நடத்த முடியும் என அதன் தலைவரான சிவசுப்பிரமணியம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன் போது, கட்சி தலைவரான சிவசுப்பிரமணியம் மீது, செயலாளரான ஆனந்தசங்கரி தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சுகயீனமுற்றுள்ள அவர் உடனடியாக வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கனடாவிற்கு சென்ற பின்னர் வழக்குத் தொடர்வது குறித்து முடிவெடுப்பதாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.