லெட்சுமிபுரம் கிராம மக்களின் குடிநீர் தேவையை வரும் 90 நாட்களுக்கு பூர்த்திசெய்யும் பொருட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு சொந்தமான கிணற்றின் பயன்பாட்டை கிராமக் குழுவிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அந்தக் கிணற்றில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் தொடங்கியது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஊராட்சி கிணற்றின் அருகே, தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி பெயரில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் தோட்டத்தில் கிணற்றை ஆழப்படுத்தியதால் தங்கள் கிராமத்தின் நீராதாரமாக இருந்த கிணற்றின் நீரூற்று பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், ஓபிஎஸ் கிணற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினருக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே பலகட்டமாக நடை பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து நேற்று முன்தினம் இரவு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் முடிவில், அடுத்துவரும் 90 நாட்களுக்கு ஓபிஎஸ் தோட்டத்து கிணற்றில் இருந்து கிராம மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என முடிவானது. இதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா கிராமக்குழுவிடம் கிணற்றின் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம் குடும்ப விவசாய கிணற்றில் இருந்து ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. நேற்று கிணற்றின் பொறுப்பை கிராமக்குழுவிடம் ஒப்படைத்தவுடன் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றுக்கு, ஓபிஎஸ் கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து வழக்கம்போல லெட்சுமிபுரம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.