சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கால நீட்டிப்பை ஏன் கோரியது என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார்.
அவர் கூறுகின்ற கருத்தானது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்று உள்ளன.
அது தொடர்பான அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அதில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அறிக்கைகள் பெறப்பட்டு வலுவான அறிக்கை வெளிவந்தது.
பொதுவாக பாரிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றங்கள், ரியல் அட் பார் நீதிமன்ற விசாரணைகள் ஊடாகவே நீதிகளை பெற்றுக்கொள்ளமுடியும். அவ்வாறான ஓர் பொறிமுறையை நாம் கோரி வருகின்றோம்.
அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச வழக்கறிஞர்கள் சர்வதேச புலனாய்வாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய விசாரணையே நாம் கோரி நிற்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் கூறுவது O.I.L.S விசாரணை அறிக்கையை வைத்தே குறிப்பிடுகின்றார்.
அது இலங்கை விசாரணைக்கான அலுவலகம் அதில் வாக்குமூலம் அறிக்கை அனுப்புமாறு கோரப்பட்டு பல வாக்குமூலம் அனுப்பப்பட்டிருந்தது.
சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணையில் அந்த அறிக்கை 2015ம் ஆண்டு வெளிவந்தது . அந்த அறிக்கை வெளி வந்து மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட்டது.
அப்போது இலங்கை அரசு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் புதிய அரசு தங்களுக்கு கால நீடிப்பு தரவேண்டும் என்றும் கலப்புப் பொறிமுறை ஊடான விசாரணைக்கு இனை அனுசரனை வழங்கியது.
சுமந்திரன் கூறுவதுபோல சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கால நீட்டிப்பை ஏன் கோரியது.
எனவே சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். அதனை தான் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
சர்வதேச விசாரணை ஊடாக சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் புலனாய்வாளர்களே உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஊடாக உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதனை நாம் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றோம்” என தெரிவித்தார்.
